Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம் வாக்குக்கு பணம் வாங்கவில்லை என சத்தியப் பிரமாணம் பெற உத்தரவிடக் கோரி சூர்யா பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுதொடர்பாக அனுப்பியுள்ள மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்கமறுத்த நீதிபதிகள், ‘‘வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம் வாக்குக்கு பணம் வாங்கவில்லை என சத்தியப் பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது. எனவே, இதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அது நீதிமன்றத்தின் பணியும் அல்ல. இதுகுறித்து மனுதாரர் அரசிடம் முறையிடலாம்’’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT