Published : 03 Mar 2021 03:25 AM
Last Updated : 03 Mar 2021 03:25 AM
கடந்த ஆண்டில் நிறைவாக பெய்த மழையால் தருமபுரி மாவட்டத்தில் மா மரங்களில் அடர்த்தியாக பூக்கள் விட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டுக்கான மழைக்காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் வரை நிறைவான மழை பெய்தது. குறிப்பாக காரிமங்கலம், பாலக்கோடு வட்டங்களிலும் அதிக மழை பெய்தது. இந்த மழையால் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பெருகி விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இதுமட்டுமின்றி நிறைவான மழைப்பொழிவு காரணமாக மாவட்டத்தில் பிப்ரவரி இறுதி வரை குளிர்ச்சியான காலநிலையும் நிலவி வந்தது. அத்துடன், கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீரை விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் நேரடி பாசனம் போன்ற முறைகளில் மா மரங்களுக்கு தொடர்ந்து பாசனம் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற காரணங்களால் மா மரங்களில் நடப்பு ஆண்டுக் கான பருவத்தில் மிக அடர்த்தியாக பூக்கள் விட்டுள்ளன. இது மா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மா மரங்களுக்கு பராமரிப்பு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியது:
சென்ற ஆண்டில் பெய்த மழையின் பலனாக நடப்பு மா காய்ப்பு பருவத்தில் காரிமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி களில் மா மரங்களில் அதிக அளவில் அடர்த்தியாக பூக்கள் விட்டுள்ளன. இந்த பூக்களில் பெரும்பகுதி பிஞ்சாகி, காயாகி அறுவடைக்கு வந்து சேர்ந்தால் மா விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையுடன் பராமரிப்பு மேற்கொண்டு வரும் மா விவசாயிகளுக்கு இயற்கை கைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT