Published : 02 Mar 2021 03:12 AM
Last Updated : 02 Mar 2021 03:12 AM
பாலியல் வன்கொடுமை செய்தபெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாரா என்று குற்றம்சாட்டப்பட்டவரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிர அரசின் மின் வாரியத்தில் தொழில்நுட்ப ஊழியராக மோகித் சுபாஷ் சவாண் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2019 டிசம்பரில் பள்ளி மாணவியை, அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுதொடர்பாக ஜல்கோன் போலீஸார் விசாரித்து, மோகித் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மோகித்துக்கு விசாரணை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஆனால் உயர் நீதிமன்றம் முன்ஜாமீனை ரத்து செய்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மோகித் சுபாஷ் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, "பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய தயாரா? திருமணம் செய்தால் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். இல்லையெனில் அரசு பணியை இழந்து சிறைக்கு செல்ல நேரிடும்" என்று எச்சரித்தார்.
இதற்கு மோகித் அளித்த பதிலில், "மாணவி 18 வயதை எட்டிய பிறகு அவரை திருமணம் செய்ய எழுத்துபூர்வமாக உறுதி அளித்திருந்தேன். ஆனால் திடீரென அவர் திருமணத்துக்கு மறுத்துவிட்டதால் நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்" என்று கூறினார்.
இதன்பின் தலைமை நீதிபதிகூறும்போது, "4 வாரங்களுக்கு மோகித்தை கைது செய்யக்கூடாது. அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம். வழக்கின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள தொடர்ந்து விசாரணை நடைபெறும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT