Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

தேர்தல் அறிவிப்பால் பழைய குற்றவாளிகள் 253 பேரிடம் நன்னடத்தை பிணை உறுதிமொழிப் பத்திரம் பெற்ற போலீஸார்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்களைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தல், நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்தல், பிடிவாரண்ட் குற்றவாளிகளை கைது செய்தல் போன்ற பணிகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேபோல, பழைய குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் முன்னிலையில் ஆஜர்படுத்தி, ‘நன்னடத்தை பிணை உறுதிமொழிப் பத்திரம்’ எழுதி வாங்கும் பணியும் நடக்கிறது.

இதுதொடர்பாக மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 109-ன்கீழ் 49 பேர், சட்டம் ஒழுங்கு பாதிப்பை தடுப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 110-ன்கீழ் 204 பேர் என மொத்தம் 253 பேர் துணை ஆணையர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நன்னடத்தை பிணை உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிணைக் காலத்தில் குற்றச் சம்பவங்களிலோ, சட்டம்ஒழுங்கு பாதிப்பு சம்பவங்களிலோ ஈடுபட்டால், தொடர்புடையவர்கள் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவில் மீதமுள்ள அனைத்து நாட்களும் சிறையில் அடைக்கப்படுவர். இதுதொடர்பாக மேலும் பலரிடம் பிணைப் பத்திரம் எழுதி வாங்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x