Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
கோவை: பூண்டி வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் செல்வதற்கு நேற்று முதல் வனத் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில். இக்கோயில் அருகேயுள்ள மலைத்தொடரில், ஏழாவது மலை உச்சியில் சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது. பக்தர்கள் மலைப் பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.
தென்கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்தக் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடர்ந்த வனப் பகுதி என்பதால், மலை ஏறுவதற்கு பிப்ரவரி மாதம் கடைசி முதல் மே மாதம் வரை மட்டுமே வனத் துறையினர் அனுமதி வழங்குகின்றனர். அதன்படி, நடப்பாண்டுக்கான மலையேற்றம் நேற்று முதல் தொடங்கியது. போளுவாம்பட்டி வனத் துறையினர், மலைப் பாதையை பக்தர்களுக்காக திறந்துவிட்டனர்.
மலை ஏறுவோர் பிளாஸ்டிக் பைகள், தீப்பெட்டி, சிகரெட், பீடி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பக்தர்கள் கொண்டு சென்ற பைகளை மலையடிவாரத்தில் வனத் துறையினர் சோதனை செய்தனர். சோதனை முடிந்ததும், பக்தர்கள் மூங்கில் கம்பு உதவியுடன் மலையேறினர்.
இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, “ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி மாத கடைசியில் இருந்து மே மாதம் வரை மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதன்படி, நடப்பாண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்கதர்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கண்காணிக்கவும் வனப் பணியாளர்கள் அடங்கிய தனிக் குழு அமைக்கப்பட உள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT