Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரம்மோற்சவத்தின் நிறைவாக கந்தசுவாமி, வள்ளி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரப்பகுதியில் பிரசித்திப் பெற்ற கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் நிறைவாக திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், காலை 6 மணி முதல் 10:30 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் வள்ளி, கந்தசுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்கள் சார்பில் பழங்கள், வஸ்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து, வள்ளி, முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர், வள்ளி, தெய்வானையுடன் தம்பதி சமேதராய் தங்கமயில் வாகனத்தில் கந்தசுவாமி அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில் மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT