Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: நாட்றாம்பள்ளி அருகே கிணற்றில் குளிக்கச்சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் எல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாத். இவரது மகன் அசோக்(30). சிங்கப்பூரில் வேலை செய்து வந்த அசோக் கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். அதற்கு பிறகு அவர் சிங்கப்பூர் செல்லவில்லை.

இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த தமிழரசி (25) என்பவருடன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அசோக்குக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த வாரம் மனைவியுடன் அசோக் மாமியார் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் தனது மைத்துனர் பிரவீன் என்பவருடன் அருகேயுள்ள கிணற்றில் குளிக்க அசோக் சென்றார்.

கிணற்றின் படியில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாத அசோக் தவறி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கினார். உடனே, அவர் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அசோக் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x