Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

‘திமுக வேட்பாளர் தேர்வு முறையில் மாற்றம்’

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசியது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதில் டெல்டா மாவட்டங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். இங்குள்ள 46 தொகுதிகளில் 40 தொகுதிகள் நிச்சயம் வெற்றி பெறுவோம். மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் 150 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி பெறுவது உறுதி. அதிமுகவினர் எவ்வளவு செலவு செய்தாலும் வெற்றி பெற முடியாது.

வேட்பாளர்கள் தேர்வை பொறுத்தமட்டில் முன்பெல்லாம் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்வோம். ஆனால் இந்த முறை நேரடியாக ஐ-பேக் குழுவினரும், வல்லுநர்களும் ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு நடத்தி அறிக்கை அளிப்பார்கள். அதன்படியே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், நாம் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி கடைசி நேரத்தில், வன்னியர் இட ஒதுக்கீடு, நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது செய்யாதவர்கள், கடைசி நேரத்தில் அறிவித்தால் எப்படி செயல்படுத்த முடியும், நிதி ஒதுக்க முடியும், அரசாணை வெளியிட முடியும். இந்த அறிவிப்புகள் எதுவும் மக்களிடத்தில் எடுபடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x