Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

‘கருத்து கேட்பு கூட்டத்தை கூட்ட அரங்கில் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது’

கரூர்: காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து நடத்திய பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட கருத்துகள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சுற்றுச்சுழல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், சுற்றுச்சூழல் பாது காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும்போது, ‘‘இக்கருத்து கேட்புக்கூட்டத்தை பொது இடத்தில் நடத்தாமல், கூட்டரங்கில் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இத்திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் என்றே இருக்கவேண்டும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மக்களுக்கு இதுகுறித்து அறிவிக்காமல் சட்டவிரோதமாக கூட்டம் நடத்தப்படுகிறது’’ என்றார்.

சாமானிய மக்கள் நலக்கட்சி மாநில பொதுச்செயலாளர் ப.குணசேகரன் பேசும்போது, ‘‘பூகோள ரீதியாக காவிரி, குண்டாறு இணைப்பு சாத்தியமில்லாதது. இத்திட்டத்தை ஒருவேளை செயல்படுத்தினால் நீரேற்று முறையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பட்டி, வெள்ளியணை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட வருவாய் அலுவலர் சி.முருகேசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அ.ந.சாரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x