Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

கண்மாயில் குளித்தபோதுவலிப்பு வந்ததால் தந்தை, மகன் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு காப்பாற்ற சென்ற மகளும் இறந்தார்

மதுரை திருமங்கலம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி (35). இவருக்கு சங்கீதா(10), லோகதர்ஷினி(8) என்ற 2 மகள்களும், மகாமுகேஷ்(6) என்ற மகனும் உள்ளனர். நேற்று மதியம் அழகர்சாமி தனது மகன், மகள்கள் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தண்டீஸ்வரி(10) ஆகியோருடன் லெட்சுமிபுரம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றார். அப்போது சங்கீதா, லோகதர்ஷினி, தண்டீஸ்வரி ஆகிய 3 பேர் கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.

அந்த கண்மாய்க்குள் சிறிது தூரம் சென்று இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு அழகர்சாமி, தனது மகன் மகாமுகேஷை கையில் வைத்து நீச்சல் சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது அழகர்சாமிக்கு திடீரென வலிப்பு வந்ததால் அழகர்சாமியும், அவரது மகனும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். தந்தையும், தம்பியும் தண்ணீரில் மூழ்குவதைக் கண்ட, அழகர்சாமியின் மூத்த மகள் சங்கீதா அலறியடித்துக்கொண்டு தண்ணீருக்குள் சென்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறியுள்ளார். இதில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனைக் கரையிலிருந்து பார்த்த லோகதர்ஷினி, தண்டீஸ்வரி ஆகியோர் தந்த தகவலின் பேரில் அப்பகுதி மக்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். தீயணைப்பு வீரர்கள் கண்மாயிலிருந்து சடலங்களை மீட்டனர். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x