Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு பல்வேறு சங்கத்தினர் வரவேற்பு

கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘2020-21-ம் ஆண்டில் பொருளாதார மந்த நிலை மற்றும் கரோனா தொற்று காலகட்டத்தில், ரூ.39,941 கோடி மதிப்பில், 62 திட்ட முதலீடுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொடிசியா வரவேற்கிறது. இதனால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி பெறும் என்பதால், இதர திட்டங்களும் வரவேற்கப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

கோவை பம்புசெட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் (கோப்மா) தலைவர் கே. மணிராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், கோவையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை கோப்மா வரவேற்கிறது. தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவு. கரோனா தொற்றால் சிறு, குறுந்தொழில்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை பட்ஜெட்டில் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், எவ்வித சலுகைகளோ, நிவாரணங்களோ அறிவிக்கப்படாதது, ஏமாற்றமளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x