Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

கலைமாமணி விருது பெற்ற சிதம்பரம் கோயில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான்

கலைமாமணி விருது பெற்ற வித்வான் ஆச்சாள்புரம் சின்னத் தம்பிக்கு சிதம்பரத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம்ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (91). சிதம்பரம் ராதாகிருஷ்ணப் பிள்ளையிடம் சீடராக இருந்து நாதஸ்வரம் பயின்றார். கடந்த 1983-ம் ஆண்டு முதல் சிதம்பரம்  நடராஜர் கோயில் ஆஸ்தான வித்துவானாக இருந்து வருகிறார். சிதம்பரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் விழாக் காலங்களில் நாதஸ்வரம் வாசித்து வருகிறார். கோயில்களில் சுவாமி புறப்பாட்டுக்கு முன் மல்லாரி ராகத்தில் நாதஸ்வரம் வாசிப்பது இவரது சிறப்பு.

கடந்த 1951-ம் ஆண்டு முதல் திருச்சி வானொலி நிலையத்தில் வாசித்து வருகிறார். இவர் ஏற்கெனவே நாதஸ்வமணி, மல்லாரி வேந்தன், ராஜரத்னா ஆகிய விருதுகளையும் பெற்றுள் ளார். தற்போது இவருக்கு தமிழகஅரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி, ஆச்சாள்புரம் எஸ். சின்னதம்பிக்கு கலைமாமணி விருது, தங்கப்பதக்கம் வழங்கிப் பாராட்டினார்.

சிதம்பரம் நடராஜர் கோயி லுக்கு நேற்று வருகை தந்த அவருக்கு பொதுதீட்சிதர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பொன்னாடை அணிவித்து கோயில் பிரசாதமும், நினைவுப் பரிசும் வழங்கிப் பாராட்டினர். இதனை தொடர்ந்து ஆச்சாள்புரம் சின்னதம்பி நடராஜர் சன்னதியில் நாதஸ்வரம் வாசித்தார்.

தொடர்ந்து சிதம்பரம் ராமகிருஷ்ண வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், ராமநாதன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x