Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

மதுரையில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு அச்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் கவுரியம்மாள் தலைமை வகித்தார். இதில் கருப்பு உடையணிந்து ஏராள மான சத்துணவு ஊழியர்கள் பங் கேற்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, சாலைப் பணியாளர் சங்கப் பொருளாளர் ரா.தமிழ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

திண்டுக்கல்லில் நடந்த மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெசி தலைமை வகித்துப் பேசினார். மாவட்டத் தலைவர் ராமு முன்னிலை வகித்தார்.

திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன் இருந்து ஊர்வலமாகச் சென்று பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 280 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை அரண்மனை வாசலில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தனர். இதையடுத்து மறியலில் ஈடு பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

தேனி நேரு சிலை முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

இதில் கலந்து கொண்ட 236 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 199 பெண்கள் உட்பட 221 பேரை ராமநாதபுரம் நகர் டிஎஸ்பி கி.வெள்ளைத்துரை மற்றும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x