Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

சேலம் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் அலுவலகம் திறப்பு

சேலம்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு 7 மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், தமிழக அரசு புதிதாக சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமை இடமாகக் கொண்டு புதிய மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களை திறக்க நடவடிக்கை எடுத்தது.

அதனடிப்படையில், கோவை மண்டலத்தில் இருந்த சேலம் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கி, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.

புதிய மண்டல அலுவலகங்களை சென்னையில் தமிழக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வளாகத்தில் புதிய அலுவலகம் குத்துவிளக்கேற்றப்பட்டு திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சேலம் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) (பொ) லதா, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x