Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

புதுக்கோட்டையில் முக்கியப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் மும்முரம்

புதுக்கோட்டை: சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்குள் புதுக்கோட்டையில் முக்கியப் பணிகளை விரைந்து தொடங்கவும், முடிவுற்ற பணிகளுக்கு திறப்பு விழா நடத்தவும் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அறிவிப்பு வெளியாகிய பிறகு புதிய திட்டங்களை தொடங்க முடியாது என்பதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள், பணிகளை விரைந்து தொடங்கவும், முடிவுற்ற பணிகளுக்கு திறப்பு விழா நடத்தவும் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டையில் அறிவிக்கப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி, துணைகோள் நகரத்துக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மேலும், முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவு ஏற்படுத்துதல், புதிய பேருந்து நிலைய விரிவாக்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், அங்கு அஞ்சல் அலுவலகம் இயங்கிய இடத்தில் மினி கிளினிக் தொடங்குவதற்கான பணிகள் விரிவாக நடைபெற்று வருகின்றன. மேலும், புதுக்கோட்டை நரிமேட்டில் கட்டப்பட்டுள்ள 2,000 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், பழைய பேருந்து நிலையம் அருகே ஆபீசர்ஸ் கிளப் இடத்தில் கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து அலுவலர்கள் தரப்பில் கூறியபோது, “மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆலோசனையின் பேரில் முடிவுற்ற பணிகளை திறக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x