Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

அங்கன்வாடி பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

திருச்சி

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டையில் நேற்று 2-வது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப் படியுடன்கூடிய முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வீதம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர்ந்து 2-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கன்வாடி பெண்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் மாவட்டச் செயலாளர் பி.சித்ரா, பொருளாளர் எஸ்.ராணி உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரியலூரில்...

அரியலூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் அரியலூர் டி.சகுந்தலா, பெரம்பலூர் மேனகா ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சிவசங்கர், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணன், துரை.அருணன் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

இதேபோல, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டையிலும் நேற்று 2-வது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x