Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM
திருவண்ணாமலை: தி.மலை மாவட்டத்தில் கூடுதலாக 513 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 1,050-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரித்து, கூடுதல் வாக்குச்சாவடி களை அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஏற்கெனவே, 2,372 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 1,050-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகளாக 513 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதனை இரண்டாக பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT