Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பிப்ரவரி மாதத்துக்கான ஜேஇஇ மெயின் தேர்வு தொடக்கம் இன்று முதல் 26-ம் தேதி வரை நடைபெறும்

நாடு முழுவதும் பிப்ரவரி மாதத்துக்கான ஜேஇஇ மெயின் தேர்வு இன்று தொடங்கி 26-ம் தேதி வரை நடக்க உள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி,என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெற, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும்.

அதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என ஆண்டுக்கு 4 முறைகணினி வழியில் முதல்நிலை தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது 4 முறை தேர்வை எழுதிக் கொள்ளலாம். அதில், எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கிறதோ, அது கணக்கில் கொள்ளப்படும்.

முதல்கட்டமாக பிப்ரவரி மாதத்துக்கான ஜேஇஇ தேர்வு, நாடு முழுவதும் இன்று (பிப்.23) தொடங்கி,26-ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட 18 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். முதல் நாளான இன்று கட்டிடவியல் பிரிவுக்கான தேர்வு நடக்கிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. வழக்கமான நடைமுறைகளுடன், கட்டாயம் முகக் கவசம், கையுறை அணிய வேண்டும். 50 மி.லி. அளவுள்ள சானிடைசர் பாட்டில் எடுத்து வரவேண்டும். திடமான காலுறை மற்றும் பெரிய அளவுள்ள பொத்தான் வைத்த உடைகளை அணிந்துவரக் கூடாதுஎன்ற விதிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x