Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததாக பேரவைத் தலைவர் அறிவிப்பு புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வெளி நடப்பு செய்ததால், ஆளும் அரசின் நம் பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததாக சட்டப்பேரவைத் தலை வர் அறிவித்தார். அதையடுத்து காங் கிரஸ் அரசு கவிழ்ந்தது. முதல்வர் நாராயணசாமி, தனது அமைச்சரவை யின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பலம் 30 ஆகும். அங்கு நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரஸ் 15, திமுக 3, சுயேச்சை ஒன்று என மொத்தம் 19 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக இருந்தனர். இதில் பாகூர் தொகுதி காங் கிரஸ் எம்எல்ஏ தனவேலு, அரசுக்கு எதிராக செயல்பட்டதால் கடந்த ஆண்டு ஜூலையில் தகுதி நீக்கம் செய்யப் பட்டார்.

இதைத் தொடர்ந்து அமைச்சராக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரும் தீப்பாய்ந் தான், ஜான்குமார் ஆகியோரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனிடையே, துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 18-ம் தேதி, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார். அவரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்து, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கடிதம் அளித்தனர். அதன்பின், பிப்.22-ம் தேதி மாலை 5 மணிக்குள் பேரவையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு விதித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் நேற்று முன்தினம் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு 12 பேர் (காங்கிரஸ்-9, திமுக-2, சுயேச்சை-1) ஆதரவு மட்டுமே இருந்ததால் பெரும்பான்மையை இழந் தது. எதிர்தரப்பில் என்.ஆர்.காங் கிரஸ் - 7, அதிமுக - 4 என 11 உறுப் பினர்களுடன் பாஜகவின் 3 நியமன உறுப்பினர்களும் இருந்தனர்.

நியமன எம்எல்ஏக்களுக்கு வாக் குரிமை உள்ளதா என்ற சர்ச்சை நிலவியது. ‘நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அண்மை யில் புதுச்சேரிக்கு வந்த தலைமைத் தேர்தல் ஆணையரும் இதை உறுதிப் படுத்தியுள்ளார்’ என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.

இந்த பரபரப்பான சூழலில், நம் பிக்கை வாக்கெடுப்புக்காக புதுச்சேரி சட்டப்பேரவை நேற்று காலை கூடியது. எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள் 11 பேரும் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் முன்னதாகவே அவைக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் வந்தனர்.

நாராயணசாமி உரை

அவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசத் தொடங்கினார். மத்திய அரசு, எதிர்க்கட்சிகள், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். ‘‘கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கொண்டு அரசை செயல்பட விடாமல் மத்திய அரசு முடக்கியது. பாஜகவினர் எம்எல்ஏக்களை மிரட்டி கட்சி மாற வைக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்கின்றனர். ஜனநாயக படு கொலையில் ஈடுபடுகின்றனர். அனைத் தையும் உன்னிப்பாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது அரசியல் விபச்சாரம்’’ என்று ஆவேசமாக பேசினார்.

இறுதியில், ‘‘வாய்மையே வெல்லும், எப்பதவியும் நிரந்தரம் இல்லை. சிவ லோக பதவி மட்டுமே நிரந்தரம்’’ என்று குறிப்பிட்டுவிட்டு நாராயணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, ‘‘முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற முடிய வில்லை. தோல்வி அடைந்துள்ளது’’ என்று குறிப்பிட்டார். இதையடுத்து, காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

அவையில் இருந்து வெளியேறிய நாராயணசாமி தனது அறையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அனைவரும் ராஜ்நிவாஸ் சென்று, துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்தனர். நாராயணசாமி தனது அமைச்சரவையின் ராஜினாமா கடி தத்தை தமிழிசையிடம் அளித்தார்.

மக்கள் மன்னிக்கமாட்டார்கள்

அதன்பிறகு செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறும்போது, ‘‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை இல்லை என்று நாங்கள் கூறியதை பேரவைத் தலைவர் ஏற்கவில்லை. எனவே, வெளி நடப்பு செய்தோம். அமைச்சரவை ராஜி னாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித் துள்ளோம். பாஜகவை சேர்ந்தவர்களை எம்எல்ஏக்களாக நியமித்து அரசைக் கவிழ்க்க சதி செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக நின்ற என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அவர்களுக்கு வரும் தேர்தலில் தகுந்த தண்டனை கொடுப்பார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x