Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

இரூரில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க் கடன்களில், கடந்த ஜன.31-ம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு முன்பே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பயிர்க் கடன்களுக்காக விண்ணப்பித்து, அதற்கான உத்தரவும், உரமும் பெற்றிருந்த விவசாயிகளுக்கு, கடன் வழங்க நிதி இல்லை என்று கூறி கடன் பணம் பட்டுவாடா செய்யப்படாமல் இருந்தது.

இதற்கிடையே, தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு, இந்த விவசாயிகளுக்கு பொருந்தாது என அவர்களிடம் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட இரூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், இரூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை நேற்று முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கும் கடன் தள்ளுபடி கிடைப்பதற்கும், விரைவாக கடன் தொகையைப் பட்டுவாடா செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x