Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

நெடார் கிராமத்தில் விவசாயிகள் மறியல்

தஞ்சாவூர்: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்து, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பல கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் புகார் எழுப்பி, ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பாபநாசம் வட்டாரம் பெருமாக்கநல்லுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஆண்டு பயிர்க் கடன் பெற்ற 73 பேரில், 28 பேர் போலி ஆவணங்களைக் கொடுத்து, ரூ.30 லட்சம் கடன் பெற்று, தள்ளுபடி சலுகையை பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, தள்ளுபடி செய்யப்பட்ட பணத்தை மீட்க வேண்டும் என்றும் கூறி, தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் நெடார் கிராமத்தில் விவசாயிகள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால், அந்தச் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் பல்வேறு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், இதுபோன்று முறைகேடு நடைபெற்றுள்ளதால், அரசு உரிய விசாரணை நடத்தி முறைகேடுகளைக் கண்டறிவதுடன், கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளின் பெயர்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x