Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பிறகு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ஆர்.ஜான் வெஸ்லி கூறியதாவது: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பிப்.27, 28 தேதிகளில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது பொது மாறுதலை எதிர்பார்த்திருந்த ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பொது மாறுதலில் கலந்து கொண்டு ஆணை பெற்றவர்கள் அடுத்த 3 ஆண்டுகள் முடிந்த பிறகுதான் பொது மாறுதலில் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற வேண்டிய பொது மாறுதல் கலந்தாய்வு கரோனா பாதிப்பு காரணமாக நடைபெறாத சூழ்நிலையில் வரும் 27, 28 தேதிகளில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கான அட்டவணையை தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், பொது மாறுதலை எதிர்பார்த்துள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த உரிய அறிவிப்பை தொடக்கக் கல்வி துறை இயக்குநர் வெளியிட வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x