Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

போலீஸாருக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்களை விளக்கும் கையேடு வெளியீடு

சென்னை பெருநகர காவல் துறையில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளான மத்திய குற்றப்பிரிவு, சென்னை பாதுகாப்பு காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் சுமார் 23 ஆயிரம் ஆண் மற்றும் பெண் போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர்.

போலீஸார் முதல் காவல் உயரதிகாரிகள் வரையிலான அனைத்து காவலருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலான போலீஸாருக்கு அரசின் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.

இதையடுத்து போலீஸார் அறிந்துகொள்ளும் வகையில் நலத்திட்டங்கள், சலுகைகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தான வசதி விவரங்கள் அடங்கிய கையேடு தயாரிக்கப்பட்டது. அதை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

போலீஸார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான நலத்திட்டங்கள் குறித்து இந்த கையேட்டில் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். சென்னையில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் இந்த கையேடு விரைவில் வழங்கப்பட உள்ளது.

காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையர்கள் ஏ.அமல்ராஜ் (தலைமையிடம்), என்.கண்ணன் (தெற்கு), கே.பவானீஸ்வரி (போக்குவரத்து), வித்யா ஜெயந்த் குல்கர்னி (மத்திய குற்றப்பிரிவு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x