Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் திருக்கச்சி நம்பிகள் திரு அவதார மஹோத்சவ விழாவில், நேற்று பூந்தமல்லி, பெரிய மாட வீதியில், தங்கமுலாம் பூசப்பட்ட பல்லக்கில் திருக்கச்சி நம்பிகள் எழுந்தருளினார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, திருக்கச்சி நம்பிகள் நந்தவனம் ஒன்றை உருவாக்கினார். அதில் பூத்த பூக்களை பறித்து, மாலைகள் தொடுத்து, பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்து சென்று, வரதராஜ பெருமாளுக்கு மாலை சூட்டி, அவரின் அருளை பெற்றவர் திருக்கச்சி நம்பிகள் என வரலாறு கூறுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கச்சி நம்பிகளுக்கு திரு அவதார மஹோத்சவம், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கியது. இன்று (22-ம் தேதி) நிறைவடைய உள்ள இந்த மஹோத்சவ விழாவில், நேற்று திருக்கச்சி நம்பிகளுக்கு திருமஞ்சனம், திருக்கைத்தல சேவை, திருப்பாவை சாற்று முறை ஆகியவை நடந்தன.
தொடர்ந்து, நேற்று மாலை தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கில் பூந்தமல்லி, பெரிய வீதியில் திருக்கச்சி நம்பிகள் எழுந்தருளினார். இந்நிகழ்வில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT