Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

தருமபுரி அருகே கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் அரூர்-ஊத்தங்கரை சாலையில் அரூர் அடுத்த எஸ்.பட்டி பேருந்து நிறுத்தத்தில் நேற்று காலை 10-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், எஸ்.பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில், கருத்தம்பட்டி யைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் நாத், எஸ்.பட்டியைச் சேர்ந்த வெண்மணி, சுப்புலட்சுமி (எ) அழகம்மாள் (22) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களைத் தவிர தங்கமணி, புஷ்பா ஆகியோர் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அயோத்தியாபட்டணம்-வாணியம்பாடி இடையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் ஆபத்தான இடங்களில் போதிய எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் பாப்பிரெட்டிப்பட்டி-அரூர்-ஊத்தங்கரை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறினர்.

அரூர் கோட்டாட்சியர் மற்றும் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத் திய காரை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் உடன் வந்தவர் ஆகிய இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x