Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

கோடை காலம் தொடங்கும் முன்பே நாகர்கோவில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் முக்கடல் அணை நீர்மட்டம் 14 அடியாக சரிவு

நாகர்கோவில்

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 14 அடியாக சரிந்துள்ளதால் கோடை காலம் தொடங்கும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மழை இன்றி கோடை காலம் போல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இறச்சகுளம், சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் கும்பப்பூ நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தாமதமாக நடவு செய்யப்பட்ட ஆற்றுப்பாசனம் மற்றும் கடைமடை பாசனப் பகுதி நெற்பயிற்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் அணைகளில் இருந்து தொடர்ச்சியாக நீர் விநியோகம் செய்யப்பட்டு வரு கிறது.

மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 41.78 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 394 கனஅடி தண்ணீர் வருகிறது. 562 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுபோல் பெருஞ்சாணி அணையில் நீர் மட்டம் 62.14 அடியாக உள்ளது. அணைக்கு 73 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், 450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்றில் நீர்மட்டம் 9.02 அடியாக உள்ளது. அணைக்கு 131 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 200 கனஅடி திறந்து விடப்படுகிறது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் 25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட முக்கடல் அணையில் நீர்மட்டம் நேற்று 14 அடியாக இருந்தது. விநாடிக்கு 3 முதல் 7 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் மழை இல்லாவிட்டால் மார்ச் மாதமே நீர்மட்டம் ஒற்றை இலக்கத்தில் குறைய வாய்ப்பு உள்ளது.

இதனால் கோடை காலம் தொடங்கும் முன்னரே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

புத்தன்அணை திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் ஏப்ரல், மே மாதத்தில் நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது மாநகராட்சி அதிகாரிகளுக்கு சவாலானதாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x