Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தக் கோரி, கோவை தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி காப்பு கூட்டியக்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் கோவையில் ‘தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்’ நேற்று நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தனர்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் தமிழறிஞர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரும் கல்வியாண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும். அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் கொண்டுவர வேண்டும். தமிழக கோயில்கள் அனைத்திலும் தமிழில் அர்ச்சனை நடத்த வேண்டும்.

கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட முன்வர வேண்டும். பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் வழியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு அரசுப் பணிகளில் 80 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பிறமொழிக் கலப்பின்றி தூய தமிழில் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x