Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

தமிழகத்துக்கு எவ்வித குறையும் வைக்காமல் திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

தமிழகத்தில் பாஜகவுக்கு எம்பிக்கள் இல்லாவிட்டாலும், பிரதமர் மோடி எவ்வித குறையும் வைக்காமல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பாஜக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது:

ஊரடங்கு காலத்தில் குறு, சிறு தொழில்கள் பாதிக்காமல் இருப்பதற்காக, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வரப்பட்டு வருகிறது. அதன் மூலமாக, சிறு, குறு தொழில்களுக்கு கூடுதல் உத்தரவாதம் இல்லாமல் மூலதன கடன் கிடைத்தது. அதேபோல், கரோனா தொற்று பரவுவதற்கு முன்பாக, நெருக்கடியில் சிக்கித் தவித்த சில தொழில்களுக்கு அவசரகால கடன் திட்டத்தின் கீழ், கடன் வழங்கி உதவிக் கரம் நீட்டப்பட்டது. அதேபோல், வட்டிச் சலுகையும் வழங்கப்பட்டது.

பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், சாலை ஓர வியாபாரிகளுக்கு எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. இதன் மூலம், கந்து வட்டி வாங்குவது தடுக்கப்பட்டது.

புதிய வேளாண் சட்டத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். அதேபோல், எந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யலாம் என பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் பாஜகவுக்கு எம்பிக்கள் இல்லாவிட்டாலும், பிரதமர் மோடி எவ்வித குறையும் வைக்காமல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x