Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM
எம்.பி., எம்எல்ஏ, துணைவேந்தர் பதவிகள் வாங்கித் தருவதாக கூறி தமிழகத்தில் ரூ.100 கோடிக்கு மேல்மோசடி செய்த கும்பலுக்கு, பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய 2 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உதவி செய்திருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
எம்.பி., எம்எல்ஏ சீட், துணைவேந்தர் போன்ற பதவிகள் வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பண மோசடி செய்ததாக கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மகாதேவய்யா (54), அவரது மகன் அங்கித் (29), இதில் இடைத் தரகராக செயல்பட்ட ஓசூரை சேர்ந்த ஓம் (34) ஆகிய 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர்.
பிரதமர், பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் என்பதுபோல காட்டிக்கொண்டு எம்.பி., எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, அரசு பொதுப்பணித் துறை ஒப்பந்தங்களை நேரடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி பலரிடம் இவர்கள் மோசடி செய்ததும் தெரியவந்தது.
நாடு முழுவதும் பல்வேறு தொழிலதிபர்கள், பணக்காரர்களை இவ்வாறு ஏமாற்றி, ஒவ்வொருவரிடமும் தலா ரூ.1.50 கோடி முதல்ரூ.10 கோடி வரை வசூலித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ரூ.100கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.
கைதான 3 பேரையும் சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது மேலும் பல புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கூறியதாவது:
பிரதமர், ஆளுநர், முதல்வர் அலுவலக முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் கையெழுத்துகளை மகாதேவய்யாவின் மகன் அங்கித் போலியாக உருவாக்கி, போலி அரசு நியமன ஆணைகளை இ-மெயில் மூலமாக அனுப்பி பலரையும் ஏமாற்றி உள்ளார். பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகளும் இவர்களுக்கு உதவி செய்துள்ளனர். அவர்கள் 2 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் சிபிசிஐடி உயர் அதிகாரிகள் ஓரிரு நாளில் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேரில் வருமாறு 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT