Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
தொடக்கக் கல்வித் துறையில் பணி யாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஒரு மாதத்தில் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2009-ல் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2003-04-ம் ஆண்டு முதல் 2005-06-ம் ஆண்டு வரை தமிழக அரசுப்பள்ளிகளில் 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். பின்னர், இவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தொடக்க கல்வித்துறையில் நியமிக்கப்பட்டனர். தொடக்க கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது,பதவி உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பரிந்துரை அனுப்பியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த பரிந்துரையை பரிசீலித்து, 2 வாரங்களில், பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு உத்தர விட்டார். இந்தப் பரிந்துரையை பரிசீலித்து 2 வாரங்களில் முடிவெடுத்து உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT