Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

மத்தியபிரதேசத்தில் கால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் கால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில் நேற்று 47 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாவட்டத் தலைநகரான சிதியில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று காலையில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்னா என்ற நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பட்னா என்ற கிராமத்துக்கு அருகில் உள்ள நீரோட்டமுள்ள கால்வாயை பஸ் கடக்கும்போது, பஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் பாலத்திலிருந்து பஸ் கால்வாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கியது.

தகவல் அறிந்து மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் பிற துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மருத்துவக் குழுவினருடன் ஆம்புலன்ஸ்களும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டன. மீட்புப் பணிக்கு உதவியாக கால்வாயில் நீர்திறப்பு நிறுத்தப்பட்டது. 2 கிரேன்கள் உதவியுடன் கால்வாயிலிருந்து பஸ் வெளியே எடுக்கப்பட்டது.

விபத்தைத் தொடர்ந்து 7 பேர் மட்டுமே நீந்திக் கரையேறினர்.

மீட்புப் பணியில் குழந்தைகள், 21 பெண்கள் உட்பட 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவை, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இன்னும் சிலரை காணவில்லை என்பதால் கால்வாயில் தேடும் பணி தொடர்கிறது.

விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், “ம.பி.யில் சிதி மாவட்டத்தில் நடந்த பஸ் விபத்து கொடூரமானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்ட செய்தியில், “இந்த விபத்து மிகவும் துயரமானது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒட்டுமொத்த மாநிலமும் துணை நிற்கும்” என்று தெரிவித்தார்.

விபத்தை தொடர்ந்து ஒரு முக்கிய நிகழ்ச்சியை மாநில அரசு நேற்று ரத்து செய்தது. மத்திய அரசின் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான புதுமனை புகுவிழா நேற்று காலை 11 மணிக்கு நடைபெறவிருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்க இருந்தார். இந்நிலையில் விபத்தை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x