Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
தென்மாவட்டங்களில் இன்று தொடங்கி 3 நாட்கள் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரை வரவேற்கவும், பிரச்சார பொதுக்கூட்டங்களிலும், உள்அரங்க கூட்டங்களிலும் மக்கள் திரள் இருக்கும்படி செய்யவும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வரின் பிரச்சாரத்துக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியினருக்கு பல்வேறு கட்டளைகளை பிறப்பித்தார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
``அம்மா சொன்னார், எடப்படியார் செய்கிறார். இதை மக்களுக்கு திரும்பத் திரும்பச் சொல்லணும். திரும்பும் திசையெல்லாம் முதல்வர், துணை முதல்வர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் திருமுகங்கள் தெரியும்படி விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும். விளம்பரங்களை டிஜிட்டல் மயமாக வைக்க வேண்டும்” என்றார்.
தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில், `ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போறாரு’ என்ற வாசகங்களுடன் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்படுகின்றன. அதுபோன்று, `வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற வாசகங்களுடன் முதல்வர், துணை முதல்வர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுடன், அதிமுக சார்பில் டிஜிட்டல் போர்டுகளை வைக்க நிர்வாகிகள் மும்முரம் காட்டியுள்ளனர்.
தேர்தல் காலத்தில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் வரிசையில், இப்போது டிஜிட்டல் விளம்பரங்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT