Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி ஹூசைன் பதுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2002 பிப்ரவரி 27-ம்தேதி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் அயோத்தி சென்று திரும்பி கொண்டிருந்த 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக 94 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2017-ம்ஆண்டில் 11 பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் சிலர் இன்னமும் தலைமறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் ஹூசைன் பதுக் (51). கோத்ரா ரயில் நிலையத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டார். சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குஜராத்தின் பஞ்ச்மகால் போலீஸ் எஸ்.பி. லீனா பாட்டீல் கூறியதாவது:
கோத்ரா ரயில் நிலையத்தில் தொழிலாளியாகப் பணியாற்றிய ஹூசைன் பதுக், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார். ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை ஊற்றியுள்ளார். கோத்ரா ரயில் நிலையத்துக்குள் பெட்ரோலை கொண்டு வந்தது, ரயிலை எரிக்க சதித் திட்டம் தீட்டியதில் இவருக்கு முக்கிய தொடர்பு உள்ளது.
ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஹூசைன் பதுக் டெல்லிக்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவாக வாழ்ந்துள்ளார். கட்டுமானத் தொழிலாளியாகவும், தலைச்சுமையாக வீட்டு உபயோக பொருட்களை வீடு வீடாக விற்றும் பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
ஹூசைன் பதுக்கின் குடும்பம் கோத்ராவின் பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி இடம் மாறிக் கொண்டே இருந்தது. அண்மையில் சுல்தான் பாலியா பகுதியில் இருந்து சிக்னல் பாலியா பகுதிக்கு அவரது குடும்பம் இடம் மாறியது. அங்கு ஹூசைன் பதுக் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. பல நாட்கள் பொறி வைத்து அவரை இப்போது கைது செய்துள்ளோம். அவர் கோத்ரா ரயில் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்.
கோத்ரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சலீம் இப்ராகிம், சவுகத் சர்கா, அப்துல்மஜித் யூசுப் மிதாஆகியோர் இன்னமும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இவ்வாறு எஸ்.பி. லீனா பாட்டீல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT