Published : 16 Feb 2021 03:11 AM
Last Updated : 16 Feb 2021 03:11 AM

சரணடைந்து திருந்தி வாழும் 15 முன்னாள் நக்சல் ஜோடிகளுக்கு பழங்குடியின முறைப்படி திருமணம்

நக்சல் இயக்கத்தில் இருந்து வெளியேறி காவல்துறையினரிடம் சரணடைந்த 15 முன்னாள் நக்சல் ஜோடிகளுக்கு காதலர் தினத்தன்று பழங்குடியின முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

சத்தீஸ்கரில் நக்சல்களை ஒழிக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதே வேளையில், தீவிரவாதத்தை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கும் நக்சல்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்படுகின்றனர். அதன்படி, நக்சல் அமைப்பில் இருந்து வெளியேறி போலீஸாரிடம் சரணடைவோரின் மறு வாழ்வுக்காக ஏராளமான உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இத்திட்டங்களின் கீழ், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நக்சல்கள் சரணடைந்து வருகிறார்கள்.

நக்சல் இயக்கத்தை பொறுத்தவரை, அதில் இருப்பவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற விதி பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக, அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த போதிலும், பல நக்சல் ஜோடிகள் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்களுக்கு பழங்குடியின முறைப்படி திருமணம் செய்து வைக்க வேண்டும் என முன்னாள் நக்சல்கள் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, 15 முன்னாள் நக்சல் ஜோடிகளுக்கு காதலர் தினமான நேற்று முன்தினம், பழங்குடியின முறைப்படி போலீஸார் திருமணம் நடத்தி வைத்தனர். இதனால் நெகிழ்ச்சி அடைந்த ஜோடிகள், போலீஸாருக்கும், சத்தீஸ்கர் அரசுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x