Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த எம்டெக் படிப்புகளை தொடங்குவதற்கான அவகாசம் முடிந்தது உயர் நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ பதில்

அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த 2 பட்ட மேற்படிப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான காலஅவகாசம் ஏற்கெனவே முடிந்து விட்டது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

அண்ணா பல்கலையில் எம்டெக்பயோ டெக்னாலஜி, எம்டெக் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய 2 பட்ட மேற்படிப்புகளுக்கான 2020-21ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை கடந்த ஜனவரி மாதம் ரத்துசெய்து அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து இந்த படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு எழுதிய மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தமிழக அரசின் 69 சதவீதஇடஒதுக்கீட்டுக்குப் பதிலாக மத்தியஅரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தம் செய்ததால், இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது சட்டவிரோதம் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த 2 பட்டமேற்படிப்புகளும் இந்தாண்டு தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலை சார்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் இந்த படிப்புகளை மத்திய அரசு இடஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டுடன் சேர்த்து தொடர்ந்து நடத்தவும், ஏற்கெனவே உள்ள 45 இடங்களுடன் மேலும்9 இடங்களை புதிதாக உருவாக்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக் கவுன்சிலின் (ஏஐசிடிஇ)அனுமதி தேவை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ரபுமனோகர், ‘‘அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ள இந்த 2 பட்டமேற்படிப்புகளையும் மீண்டும் தொடங்குவதற்கான காலஅவகாசம் கடந்த டிச.31-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவேஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த2 பட்டமேற்படிப்புகளுக்கும் மீண்டும் அனுமதியளிக்க முடியாது என தெரிவித்தார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன்,‘‘தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதா அல்லது மாநில அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதா என்ற குழப்பத்தில் இந்த 2 பட்ட மேற்படிப்புகளையும் அண்ணா பல்கலை ரத்து செய்திருப்பது அதிர்ச்சிக்குரியது. தமிழகத்தில் உள்ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்போது 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி சேர்க்கை வழங்கப்பட வேண்டும். ஆனால் வேண்டுமென்றே கடந்த ஜனவரி மாதம் இந்தபடிப்புகளை அண்ணா பல்கலை ரத்து செய்து மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளது என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அரிதிலும் அரிதான சூழலைக் கருத்தில் கொண்டு இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகமோ அல்லது தமிழக அரசோ ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடி தீர்வு காணக்கூடாது என கேள்வி எழுப்பினார். மேலும், இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அறிவுறுத்தி விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகுமார், இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவருடன் அண்ணா பல்கலை துணைவேந்தர் கலந்துஆலோசித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதில் சிக்கல் உள்ளது. தேவைப்பட்டால் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றார்.

அதில் கோபமடைந்த நீதிபதி, இந்த விஷயத்தில் எல்லா தவறும் அண்ணா பல்கலைக்கழகம் மீது உள்ளது. அப்படியிருக்கும்போது அண்ணா பல்கலைக்கழகம்தான் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். 2 பட்டமேற்படிப்புகளை ரத்து செய்திருப்பதில் உரிய வழிமுறைகளை பின்பற்றாததற்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும், என்றார்.

அதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்.15-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x