Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

இந்தியாவில் வரும் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.16.50 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய இலக்கு நபார்டு வங்கித் தலைவர் தகவல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மையம், இந்திய வேளாண் பொருளாதார சங்கத்தின் 80-வது ஆண்டு ஆராய்ச்சி மாநாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் தலைமை வகித்தார். வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் கே.ஆர்.அசோக் வரவேற்றார். நபார்டு வங்கித் தலைவர் ஜி.ஆர்.சின்தாலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

வேளாண் மேம்பாட்டு நிறுவனங்கள், சந்தை வழி மேலாண்மை, உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் தொழிலாளர் திறன் மேம்பாடு, தொழிலாளர் உற்பத்தித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு, மலைத் தோட்டப் பயிர்களின் வேளாண் வணிகம் மற்றும் சர்வதேச வணிக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இதில், பல்வேறு பொருளாதார அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

பின்னர், நபார்டு வங்கித் தலைவர் ஜி.ஆர்.சின்தாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விவசாயம் பாதிக்கப்படவில்லை. உற்பத்தி மற்றும் விநியோகம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

விவசாயத்துக்கு உள்கட்டமைப்பு, கடன் வசதி, உற்பத்தி ஆகியவை அவசியமாகும். இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு 2020-21-ம் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து, இதில் ரூ.12 லட்சம் கோடியை வழங்கிவிட்டது. 2021-22-ம் நிதியாண்டில் விவசாயத்துக்கு ரூ.16.50 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 86 சதவீதம் சிறு, குறு விவசாயிகள் இருந்தாலும், சாகுபடி செய்வதற்குத் தேவையான பொருளாதார வசதி அவர்களுக்கு இல்லை. இதனால், விவசாயிகளுக்கு உதவுவதற்காக 4,600 உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 4 ஆண்டுகளில் இந்நிறுவனங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தனியார் கடனுக்கான வட்டி, உற்பத்தி செலவு ஆகியவை குறைந்து, விவசாயிகள் வறுமையில் இருந்து விடுபட முடியும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறும் கடனை விவசாயிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு நபார்டு வங்கி கைகொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x