Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM
ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வாங்கிக்கொடுத்த குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் யாதவின் பிறந்தநாள் இன்று(பிப்ரவரி 10).
1992-ம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஹிசார் என்ற ஊரில் விகாஸ் கிருஷ்ணன் பிறந்தார். அவரது அப்பா மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். 1994-ம் ஆண்டில் விகாஸ் கிருஷ்ணனின் அப்பா, பிவானி நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு பள்ளிப் படிப்பைத் தொடங்கிய விகாஸ் கிருஷ்ணன், தனது 10 வயதிலேயே பிவானியில் உள்ள குத்துச்சண்டை கிளப்பில் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கினார். பின்னாளில் புனே நகரில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் அவர் பயிற்சியைத் தொடர்ந்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் குத்துச்சண்டையில் தொடர்வதா அல்லது படிப்பைத் தொடர்வதா என்ற குழப்பம் விகாஸ் கிருஷ்ணனுக்கு இருந்தது. இந்நிலையில் 2012-ல் குத்துச்சண்டை களத்தில் இருந்து சிறிது காலம் விலகியிருந்த விகாஸ் கிருஷ்ணன், குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார். பின்னர் ஹரியாணா போலீஸில் பணிக்குச் சேர்ந்த விகாஸ் கிருஷ்ணன், தற்போது டிஎஸ்பியாக உள்ளார்.
ஒரு புறம் காவல் துறையில் பணியாற்றினாலும், மறுபுறம் குத்துச்சண்டை களத்திலும் இறங்கி இந்தியாவுக்காக பல பதக்கங்களை அவர் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கால் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய விகாஸ் கிருஷ்ணன், துரதிருஷ்டவசமாக பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் அடுத்து வரவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக தீவிர பயிற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
“கடந்த முறை தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதால், என்னால் பதக்கம் வெல்ல முடியவில்லை. இம்முறை தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு பதக்கம் வெல்வேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் விகாஸ் கிருஷ்ணன். இதற்காக வெளிநாடுகளில் பயிற்சியும் பெற்றுள்ளார். அவரது ஒலிம்பிக் கனவு நனவாக வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT