Published : 09 Feb 2021 03:14 AM
Last Updated : 09 Feb 2021 03:14 AM

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பழநியில் தங்கத் தொட்டில் வழிபாடு தொடக்கம்

பழநி மலைக்கோயிலில் நேற்று மீண்டும் தொடங்கப்பட்ட தங்கத்தொட்டில் வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர்.

பழநி

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டம், பழநி கோயிலில் தங்கத் தொட்டில் வழிபாடு நேற்று முதல் தொடங்கப்பட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தங்கத்தொட்டில் வழிபாடு வழக்கமாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கால் இந்த வழிபாட்டு முறை நிறுத்தப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் படிப் படியாக தளர்வு செய்யப்பட்ட பிறகு கோயிலில் பக்தர்கள் செல்ல கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டன. இந்நிலையில் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் தங்கத் தொட்டில் வழிபாடு நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி, தங்கத்தொட்டிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தங்கத்தொட்டில் வழிபாடு என்பது குழந்தைகளை மலைக் கோயிலில் உள்ள தங்கத் தொட் டிலில் அமரவைத்து ஆட்டுவித்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆகும்.

இதன்மூலம் குழந்தைகள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது நம்பிக்கை. இதற்கு பக்தர்கள் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். ரூ.30 லட்சம் மதிப்புள்ள இந்த தங்கத்தொட்டிலை கோயிலுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். அப்போதிருந்து பழநி மலைக் கோயிலில் தங்கத் தொட்டில் வழிபாடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x