Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

கடந்தாண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

கடந்தாண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல முறை தள்ளி வைக்கப்பட்ட ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அச்சம் காரணமாக பலரால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில், வயது வரம்புமுடிந்தவர்கள், தேர்வில் பங்கேற்கஇயலாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது யுபிஎஸ்சி சார்பில் மனுதாரர்களின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜன.29அன்று விசாரணைக்கு வந்தபோது பல்வேறு அசாதாரணமான சூழலில், இக்கட்டான தருணங்களில் இதற்கு முன்பாக தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது தற்போது மட்டும் ஏன் மறுவாய்ப்பு வழங்கமறுக்கப்படுகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்றுமுன்தினம் மீண்டும் இதேஅமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதாக அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்தஅக்டோபர் மாதம் நடத்தப்பட்ட யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை கடைசித் தேர்வாகக் கொண்டு தேர்வு எழுத முடியாதவர்களுக்கு, இந்தாண்டு மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் மறுவாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில்பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு யுபிஎஸ்சி நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தது. ஆனால் வயது வரம்பு அடிப்படையில் கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்வு கடைசி தேர்வாக இருந்து, தேர்வு எழுத முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மறுவாய்ப்பு அளிக்கப்படும் என யுபிஎஸ்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 2021-22 ம்ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கைதள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

(இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்த நீதிமன்ற பார்வைக்குள்ளாகும் அரசுப் பணியாளர் தேர்வுகள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் கரோனா தொற்றின் காரணமாக தேர்வுக்கு தயாராக முடியாமல், வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு அளிக்கப்படாதது குறித்தும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதிருப்தி குறித்தும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x