Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM
கோவை ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா அருகே, மத்திய முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ல் இந்த சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில், ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் மாநகராட்சி சார்பில் மாதிரி சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, சி.சுப்பிரமணியத்தின் சிலையை அகற்றத் திட்டமிடப்பட்டு, இந்தப் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம், சிலையின் சுற்றுச்சுவர் மற்றும் பீடத்தை சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நேற்று காலை ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா அருகே திரண்டனர். உரிய அனுமதியின்றி சிலையை அகற்ற முயல்வதாகப் புகார் தெரிவித்த காங்கிரஸார், சுற்றுச்சுவர், பீடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸாரின் புகார் தொடர்பாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், சேதப்படுத்தப்பட்ட பகுதி மீண்டும் சீரமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும், பீடம், சுற்றுச்சுவரை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், சேதப்படுத்தப்பட்ட சுற்றுச்சுவரை மாநகராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறும்போது, ‘‘முறையாக அனுமதி பெற்று, சிலை அமைக்கப்பட்டு, கமிட்டியின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. எந்த முன்னறிவிப்புமின்றியும், நோட்டீஸ் அளிக்காமலும், சிலையை அகற்ற முயல்வது சரியல்ல" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT