Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் நிலுவை தொகைரூ.12,110 கோடியும் தள்ளுபடி சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடியும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிக்கை அளித்து பேசியதாவது:

உழவர்கள் இந்த உலகத்துக்கே அச்சாணி போன்றவர்கள். ஒரு நாட் டின் விவசாயத்தை பொறுத்தே அதன் வளம் அமையும். அதனால்தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வேளாண்மை உள்ளிட்ட முதன்மை துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, பல திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த அதிக நிதியும் ஒதுக்கினார். அந்த வழியை பின்பற்றி, தற்போதைய அரசும், விவசாயிகளின் நலன் பேணவும், விவசாயம் செழிக்கவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகளுக்கு துயர் ஏற்படும்போதெல்லாம், அரசு உதவிக்கரம் நீட்டி அவர்களை காப்பதில் முன்னிலையில் இருக்கிறது. அதனால்தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், 2016 மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருந்த ரூ.5,318.73 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். இதனால் 12.02 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றனர். கடந்த 2017-ல் கடும் வறட்சியால் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக அரசு ரூ.2,247 கோடி வழங்கியது. தொடர்ந்து, பல்வேறு நலத் திட்டங்கள், வேளாண் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2019-20 ஆண்டில் கரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின. தமிழகத்திலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயமும் பாதிக்கப்பட்டதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியில் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தின. இந்த பேரிடரால், அறுவடைகளுக்கு தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை, தோட்டப் பயிர்கள் மட்டுமல்லாமல், மானாவாரி பயிர்களும் பெருமளவில் சேதமாகின. இதனால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

விவசாயிகளின் நலனில் அக் கறை கொண்டுள்ள எனது தலைமையிலான அரசு, மத்திய அரசின் நிதி விடுவிப்பையும் எதிர்பார்க்காமல், 16.43 லட்சம் விவசாயிகளுக்கு, சாகுபடி செய்த பயிர்களுக்கான இடுபொருள் உதவித் தொகை ரூ.1,717 கோடியை உடனே வழங்க உத்தரவிட்டு, அந்த தொகையும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த இடுபொருள் உதவித் தொகை, விவசாயிகளின் துயரை துடைத்தாலும், அவர்கள் மீண்டும் பயிர்த் தொழிலை தொடர உதவ வேண்டும் என்று அரசு எண்ணியது. மேலும், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

எனவே, தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடியும் தள்ளுபடி செய்யப்படும்.

‘நானும் ஒரு விவசாயி. விவசாயி களை அதிகமாக நேசிப்பவன். விவசாயிகளின் இன்னலை தீர்ப்பதே எனது முதல் கடமை’ எனும் நிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், பயிர்க் கடன் நிலுவை வைத்துள்ள 16.43 லட்சம் விவசாயிகளும் சிரமம் இன்றி, வரும் ஆண்டில் பயிர் சாகுபடியை தொடர முடியும்.

கடந்த 2006 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, நில மற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக திமுகவினர் வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்றவே முடியவில்லை என்பது மக்களுக்கு தெரியும். அதேபோல, கடந்த 2019 மக்களவை பொதுத் தேர்தலின்போது, ‘கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதி அளித்தார். அந்த தேர்தலில் அவரது கட்சி, கூட்டணியை சேர்ந்தவர்கள் 38 இடங்களில் வென்றனர். வெற்றி பெற்றதும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்தனர். இது தான் அவர்கள் ஒவ்வொரு தேர் தலின்போதும் கடைபிடிக்கும் வாடிக்கை.

தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரே அரசு அதிமுக அரசுதான் என்பதை மக்கள் அறிவார்கள். தற்போது பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, அரசாணையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரமும் வரும் பட்ஜெட்டில் ஏற்படுத்தப்படும். இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் தெரி வித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லூர் கே.ராஜு. ஓ.எஸ்.மணி யன், எம்எல்ஏக்கள் கு.தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் வர வேற்று பேசினர். தவிர, அனைத்து எம்எல்ஏக்களும் ஒவ்வொருவராக முதல்வரின் இருக்கை அருகே வந்து அவருக்கு நன்றி தெரிவித்தனர். பேரவைக் கூட்ட முடிவிலும், முதல்வருக்கு அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசும்போது, ‘‘முதல்வர் அறிவிப்பின் மூலம் 16 லட்சத்து 43 ஆயி ரத்து 347 விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் ரூ.12,110 கோடியே 74 லட்சம் அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x