Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

சுயஉதவிக் குழு, ஊராட்சி கூட்டமைப்புக்கு ரூ.1,362 கோடி வங்கிக் கடன் இணைப்பு திட்டம் தொடக்கம் காசோலைகளை முதல்வர் வழங்கினார்

சென்னை

தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு ரூ.1,361 கோடியே 75 லட்சத்துக்கான வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 20,186 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,083 கோடியே 96 லட்சம் மற்றும் 317 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.277 கோடியே 79 லட்சம் என ரூ.1,361 கோடியே 75 லட்சத்துக்கான வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 7 சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், 2019-20 ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.12,500கோடி வங்கிக்கடன் இணைப்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.13,301 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த 2020-21 நிதியாண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார்.

இலக்கை கடந்து..

ஆனால், இந்த இலக்கை கடந்து இதுவரை ரூ.15,653 கோடியே 4 லட்சம் வங்கிக்கடன் தொகை, 3 லட்சத்து 82 ஆயிரத்து 121 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.48,737 கோடியே 40 லட்சம், வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளில் ரூ.81,582 கோடியே 65 லட்சம் வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x