Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கட்கிழமை மத்திய பட்ஜெட்டை டிஜிட்டல் வடிவில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 74 ஆண்டுகால வரலாற்றில் காகிதப் பயன்பாடு இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், உ.பி. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இதில் மத்திய அரசைப் பின்பற்றி, காகிதப் பயன்பாடு இல்லா பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் யோகி ஆதித்யநாத் அரசு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை உ.பி. பெற உள்ளது.
மேலும் ‘இ-கேபினட்’ முறையை நடைமுறைப்படுத்தவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொருஅமைச்சருக்கும் சிறிய வடிவிலான கணினி (டேப்லெட்) வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்கள் மெய்நிகர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பதிவில், “இ-கேபினட் முறையை அமல்படுத்துவதன் மூலம் மாநிலத்தில் மின் ஆளுகை மற்றும் மின்-அலுவலக முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணியில் வேகமும் வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே ம.பி.யிலும்வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான முடிவு நேற்று முன்தினம் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT