Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM
நாமக்கல்: இறைச்சிக் கடைக்காரர் கொலை வழக்கில் பெண் உட்பட 4 பேரை நல்லூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள சோழசிராமணியைச் சோ்ந்தவர் இறைச்சிக் கடை உரிமையாளர் சரவணன். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சரவணன் கொலை செய்யப்பட்டு பரமத்தி வேலூர் அருகே பாமகவுண்டம்பாளையத்தில் உள்ள கழிவு நீர் குட்டையில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்தார்.
இதுதொடர்பாக நல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பரமத்தி வேலூர் வடுகபாளையத்தைச் சேர்ந்த கீதா (39), அவரது மகன் இளவரசன் (19), மருமகனான சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (31), அவரது நண்பரான கடம்பூரைச் சேர்ந்த பிரபாகரன் (31) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
விசாரணை குறித்து போலீஸார் கூறும்போது, இறைச்சிக் கடை உரிமையாளர் சரவணனுக்கும், வடுகபாளையத்தைச் சேர்ந்த கீதாவுக்கும் தவறான பழக்கம் இருந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சரவணன், கீதாவின் வீட்டிற்கு சென்றபோது ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க கீதா தனது மகன், மருமகனுடன் சேர்ந்து சரவணனை சாக்கு மூட்டையில் கட்டி குட்டையில் வீசியது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT