Published : 01 Feb 2021 03:13 AM
Last Updated : 01 Feb 2021 03:13 AM
கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடைபெற்ற சி-டெட் தகுதித்தேர்வில் ஏராளமான தேர்வர்கள் கலந்துகொண்டனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் மத்திய பள்ளிகளில், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற வேண்டிய சி-டெட் தேர்வு கரோனா தொற்று காரணமாக ஜன. 31-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, சி-டெட் தேர்வு நேற்று நாடு முழுவதும் 135 நகரங்களில் நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் தேர்வு நடந்தது. காலை 9.30 மணிக்கு சி-டெட் முதல் தாள் தேர்வும் (இடைநிலை ஆசிரியர்களுக்கானது), பிற்பகல் 2 மணிக்கு சி-டெட் 2-ம் தாள் தேர்வும் (பிஎட் பட்டதாரிகளுக்குரியது) நடைபெற்றன.
சென்னையில் அண்ணா நகர்எஸ்பிஓஏ மேல்நிலைப் பள்ளி, பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் ஏராளமானோர் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. தேர்வர்கள் முகக் கவசம் அணிந்து வந்திருந்தனர்.
நுழைவு வாயிலில் அவர்களின் உடல்வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலமாக பரிசோதிக்கப்பட்டது. அதன்பின்னரே அவர்கள் தேர்வறைக்குச் செல்லஅனுமதிக்கப்பட்டனர். தேர்வறையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளே போடப்பட்டிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT