Published : 31 Jan 2021 03:13 AM
Last Updated : 31 Jan 2021 03:13 AM

அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் வீரமாமுனிவர், தேவநேய பாவாணர் விருது முதல்வர் பழனிசாமி நாளை வழங்குகிறார்

சென்னை

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் வீரமாமுனிவர், தேவநேய பாவாணர் விருதுகளை முதல்வர் பழனிசாமி நாளை வழங்குகிறார்.

இதுகுறித்து செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் வழியாக பல்வேறு மொழி வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டு முதல் அகர முதலி திட்டத்தின் சார்பில் 80 பேருக்கு 6வகையான விருதுகள் வழங்கஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுமுதல் வழங்கப்படும் வீரமாமுனிவர் விருதையும், தேவநேய பாவாணர் விருதையும் முதல்வர் நாளை (பிப்.1) வழங்குகிறார். மற்ற விருதுகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் நடைபெறும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு பயிற்சி

இதுதவிர, தூய தமிழைப் பரப்பும் வகையில், கல்லூரிகள் தோறும் மொழி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுமுதல் ஒரு கல்லூரிக்கு 10 மாணவர்கள் வீதம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும்அரசு உதவி பெறும் அனைத்துகல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மொழி வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வழியாக அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக சென்னையில் உள்ள 20 கல்லூரிகளில் இருந்து 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பிப் 2-ம் தேதியில் இருந்து 5-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும்.

பிப்.2-ம் தேதி காலை 10 மணிக்கு தொழில்நுட்ப கல்வி இயக்கக இயக்குநரும், கல்லூரி கல்வி கூடுதல் இயக்குநருமான கே.விவேகானந்தன் விழாவை தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளான பிப்.5-ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், பயிற்சி மாணவர்களுக்கு நியமன சான்றிதழ்கள் வழங்குகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x