Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

தண்டையார்பேட்டை கொலை வழக்கு சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2013-ம் ஆண்டு தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், அதே பகுதியில் விளையாடிய கிருஷ்ணன் என்பவரின் 5 வயது மகன் பிரதீஷ் மீது மோதியுள்ளார். அதையடுத்து கிருஷ்ணன், அந்தோணி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் பேச்சுவார்த்தை நடத்தி இருசக்கர வாகனத்தில் வந்தவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதுஅந்தோணி, கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திஉள்ளது.

இதனால் அந்தோணி, கிருஷ்ணன் மற்றும் ஏழுமலை, சீனி (இருவரும் சகோதரர்கள்) பாலு, அய்யப்பன், தாஸ் ஆகியோர் நள்ளிரவில் வீட்டில் தூங்கிய செந்திலை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி, கிருஷ்ணன் உட்பட 7 பேரையும் கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 7 பேர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் 7 பேருக்கும் தலா 3 ஆண்டு, 7 ஆண்டு, 10 ஆண்டு என தனித்தனியாக சிறை தண்டனை விதித்தும், மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x