Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

சென்னையில் இருந்து மீண்டும் புதுச்சேரி, மைசூருக்கு ரயில்கள்

சென்னையில் இருந்து புதுச்சேரி, மைசூருக்கு மீண்டும் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

வழக்கமான பயணிகளின் ரயில்களின் சேவை இன்னும் முழுஅளவில் தொடங்கவில்லை. இருப்பினும் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு 7 தினசரி சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படவுள்ளன. அதில், தற்போது 4 சிறப்புரயில்களுக்கான காலஅட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 31-ம் தேதிமுதல் மாலை 6.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06115) அதேநாளில் இரவு 10.15 மணிக்கு புதுச்சேரி செல்லும். மறுமார்க்கமாக புதுச்சேரியில் இருந்து, வரும் பிப்.1-ம் தேதி முதல் தினமும் காலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06116) அதேநாளில் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் வரும்.

இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஜன.29) முதல் இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06021) மறுநாள் காலை 6.40 மணிக்கு மைசூர் செல்லும். மறுமார்க்கமாக மைசூரில் இருந்து, வரும் 30-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06022) மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். மற்ற சிறப்பு ரயில்களின் கால அட்டவணை விவரம் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயணிகள் வரவேற்பு

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘மைசூர், புதுச்சேரிக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளையும் இணைத்து, கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்ய ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x