Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீதான அதிருப்தியால் நமச்சிவாயம் அமைச்சர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பாஜகவில் இணைய கடந்த 26-ம் தேதி டெல்லி புறப்பட்டார்.
டெல்லியில் முகாமிட்டிருந்த அவர் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்து இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் காரணமாக இணைப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நேற்று மாலை, பாஜக தேசிய பொதுச்செயலர் அருண்சிங் முன்னிலையில் நமச்சிவாயம் அக்கட்சியில் இணைந்தார். அவருடன் எம்எல்ஏ பதவியைத் துறந்த தீப்பாய்ந்தானும் பாஜகவில் இணைந்தார்.
அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ தீப்பாய்ந்தான் பதவி விலகலைத் தொடர்ந்து மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதுவையில் ராஜினாமா செய்வார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பாஜகவுக்கு வரும் எம்எல்ஏக்களுக்கு வரும் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில் சிக்கல் இருப்பதால் மேலும் சிலர் காங்கிரஸில் இருந்து செல்வது தற்காலிகமாக தடுக்கப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது. புதுவையில் பாஜக கூட்டணியில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும்போது தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT