Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
தருமபுரி மாவட்டத்தில் 1.49 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வேட்டி மற்றும் சேலைகளை வழங்கும் பணியை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிப்பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நலவாரிய உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
தற்போது நலவாரிய உறுப்பினர்களில் ஆண்களுக்கு வேட்டி, துண்டு, பெண்களுக்கு 100 சதவீதம் பருத்தியால் ஆன சேலை என ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 789 நலவாரிய உறுப்பினர்களுக்கும் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத நலவாரிய உறுப்பினர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் சென்று கையொப்பம் பெற்று பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்வில் துணை ஆட்சியர் பிரதாப், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT